முருகப்பெருமான் தமிழ்த்தெய்வம். குறிஞ்சிக்கிழவோன் என்று சங்க நூல்களில் குறிப்பிடப்படுபவன். பண்டைக் காலத்தில் தமிழ் நிலம் ஐவகையாகப் பகுக்கப்பட்டிருந்தன. மலையும், மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி எனப்பட்டது. இந்நிலத்தின் இறைவன் கந்தவேள். நக்கீரனால் இயற்றிய திருமுருகாற்றுப்படையே கந்தப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்கும் முதல் தமிழ் நூல் எனலாம். முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் என்றாலும் அழகுதான். அமுதுதான். இது காரணம் பற்றியே முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் என்கிறார் அருணகிரிநாதர். முருகனின் திருஅவதாரம் தொடங்கி அவனது முழு வரலாற்றையும் வடமொழியில் ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. அதை அடியொட்டி கச்சியப்ப சிவாச்சாரியார் அழகு தமிழில் கந்தபுராணத்தை இயற்றியிருக்கிறார்.
கந்தபுராணத்தைப் படிக்கும்போது முருகப்பெருமானின் பெருமைகளை மட்டுமல்லாமல் தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் பற்றிய செய்திகளையும் தட்ச சம்ஹாரம் முதலிய புராண வரலாற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய சிறப்புக்களுடன் செய்யுள் வடிவில் இருந்த கந்தபுராணத்தை கதைவடிவில் ஆக்கியிருக்கிறார் கார்த்திகேயன் என்கிற ஸ்ரீ எஸ். ராமநாதன். யாவரும் படித்து எளிதில் தெரிந்து கொள்ளக் கூடிய சிக்கல் இல்லாத இனிய தமிழ் நடை. சூரபத்மன் தேவர்களுக்கு இழைத்த கொடுமைகள், அவர்களை விடுவிக்க வேண்டி அவதரித்த திருமுருகன் வரலாறு முழுக்க விரிவாகத் தரப்பட்டிருக்கிறது இந்நூலில். இதனை எல்லோரும் பக்தியுடன் மனமுருகி படித்து முருகனின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ப்ரார்த்திக்கின்றோம்.
பல வாசக நேயர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ கந்த புராணம் எனும் இவ்வரிய நூல் தற்சமயம் மின்புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. முருகப்பெருமானின் அடியார்கள் இதனை பெருமளவில் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டுகிறோம்.